அத்தியாயம் 14

Loading

ஜீவிதா தன் கையிலிருந்து கீழே விழுந்த துப்பாக்கியை எடுத்து, உள்ளே நுழைந்த காவலர்களை குறி பார்த்தாள்.

உள்ளே நுழைந்தவர்களில் பலர், சுற்றியிருந்த வேலைகாரர்களை பிடித்து விட்டனர். மேலும் சிலர் ஜீவிதாவினை நெருங்கினர்.

“மேடம் கன்ன கீழ போடுங்க” என்று காவல்துறையில் இருந்த ஒருவன் கூறினான்.

ஜீவிதாவின் பார்வை மாறவில்லை. அருகில் நின்றிருந்த தாரண்யாவும், ஒரு விரோத பார்வையில் முகம் சிவக்க நின்று இருந்தாள். அவர்களை பார்த்த விபின், நிதுலனுக்கு ஏதோ கண்ணால் சைகை காட்டினான்.

அதோடு, அருகில் நின்றிருந்த வேறு ஒரு நண்பனுக்கும் சைகையில் ஏதோ கூறினான். காவல்துறையினரும், ஜீவிதாவை துப்பாக்கியை கீழே போடும் படி சொல்லிக்கொண்டே இருந்தனர்.

அவர்களை குறி பார்த்துக் கொண்டிருந்தவள், திடீரென தன் தலையில் துப்பாக்கியை வைத்தாள். நொடி நேரத்தில் அழுத்த போகிறாள் என்ற நிலையிலும், தாரண்யாவுக்கு சுயநினைவு வரவில்லை.

அடுத்த நொடி அந்த மண்டபம் அதிரும் படி துப்பாக்கி குண்டு சிதறியது. ஜீவிதா தரையில் கிடக்க தாரண்யாவை அவளது நண்பன் ஒருவன் பிடித்துக் கொண்டான்.

அவளது கையை பின்னால் வளைத்து விலங்கு மாட்டி விட்டு, ஜீவிதாவிடம் வந்தான். தரையில் கண்ணை மூடி படுத்துக் கிடந்தாள்.

“ஒன்னும் பிரச்சனை இல்லயே?” என்று அவன் கேட்க, “இல்ல. மயங்கிட்டா” என்றான் விபின்.

ஜீவிதா துப்பாக்கியை அழுத்தும் போதே, அவளது கையைப் பிடித்துத் தூக்கியவன், பின் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினான். மேல் நோக்கி சுட்ட ஜீவிதா அதே நொடி மடங்கி கீழே விழுந்து விட்டாள்.

“இவங்கள நான் பார்த்துக்கிறேன். அந்த ஆள பிடிங்க” என்று விபின் கூற, திரும்பி பார்த்தான்.

அந்த குரு அமர்ந்து இருந்த இடம் வெறுமையாக இருந்தது. ஜீவிதாவிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றிய காவல் துறையினரும், அந்த குருவை தான் தேடினார்கள்.

தாரண்யாவை இருவர் பிடித்து வாயில் எதையோ ஊற்றினார்கள். சில நிமிடங்களில் அவளும் மயங்கி விழுந்தாள். இருவரையும் வெளியே தூக்கிச் சென்றனர்.

இருவருக்காகவும் வெளியே அவர்களது மருத்துவ நண்பன் காத்து இருந்தான். இருவருக்கும் முதலுதவி செய்து விட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டான்.

மாலை பொழுது தான் ஜீவிதாவிற்கு நினைவு வந்தது. தலையை லேசாக அசைத்துப் பார்த்தாள். சாகவில்லை என்ற எண்ணத்துடன் கண்ணைத் திறந்தாள்.

கார்த்திக்குடன் மிருதுளா அமர்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தாள். ஜீவிதா முழிப்பதை பார்த்து, வேகமாக அவளிடம் வந்தாள்.

“ஆர் யூ ஓகே ஜீவி?”

ஜீவிதா மறுப்பாக தலையசைத்து விட்டு, “என்ன நடந்துச்சு?” என்று கேட்டாள்.

“தெரியல. நான் உள்ள வரலையே. நானும் ரூபனும் ஹாஸ்பிடலுக்கு வந்துட்டோம்”

“தாரண்யா எப்படி இருக்கா?”

“அவளும் மயக்கத்துல தான் இருக்கா. முழிச்சதும் பார்க்கலாம்”

“சீரியஸா இருக்களா?”

“இல்ல இல்ல. அவள மயக்கம் போட வச்சு தான் தூக்கிட்டு வந்தாங்க. மருந்து இறங்க லேட் ஆகும்னு சொன்னான்”

“ஓ.. இது என்ன ஹாஸ்பிடல்? எப்படி வந்தேன்? பிரச்சனை முடிஞ்சதா?”

“எதுவுமே எனக்கும் தெரியாது. கொஞ்ச நேரம் படு. டாக்டர கூட்டிட்டு வரேன்”

மிருதுளா சென்று விட, கார்த்திக் அருகில் வந்தான்.

“இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா?”

“அதான் சரியாகிட்டேனே. நீ எப்போ வந்த?”

“உன் அக்கா கிளம்புனதுமே உன்னை தேடி வந்துட்டேன். அண்ணன கமிஷ்னர் ஆபிஸ்க்கு அனுப்பிட்டியாமே. மாமாவும் அண்ணனும் போன் பண்ணி சொன்னாங்க”

“அவங்க அங்க இருக்கது தான் சேஃப். அந்த குருவ பிடிச்சா தான் பிரச்சனை முடியும். பிடிச்சாங்களானு தெரியல”

“பிடிச்சுருப்பாங்க. நீ யோசிக்கிறத விடு. ரெஸ்ட் எடு”

மருத்துவர் வந்து பார்த்து விட்டு, அவளுக்கு இனி பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறி விட, தாரண்யாவை பார்க்கச் சென்றாள்.

தாரண்யாவின் உடலில் இருந்த மருந்தை, கஷ்பட்பட்டே வெளியேற்றி இருந்தனர். அவளுக்கு அந்த கொலைகார கும்பல் கொடுத்த மருந்தை கண்டுபிடிக்கவே பல மணி நேரமானது.

அதை வெளியேற்றிய பின்பு, மயக்கத்தில் தான் இவ்வளவு நேரமும் இருக்கிறாள். அவளுக்கு பெரிதாக ஆபத்து இல்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகே, ஜீவிதாவிற்கு நிம்மதியாக இருந்தது.

ஜீவிதாவிற்கு பதிலாக தாரண்யா செல்ல வேண்டும் என்று சொல்லும் போது, யோசிக்காமல் ஒப்புக் கொண்டாள். அவளது உயிரை பணயம் வைத்து விட்டு, இரண்டாவதாக ஜீவிதா சென்றாள். எடுத்ததுமே ஜீவிதா சென்றால், அந்த நிமிடமே அவர்கள் அங்கிருந்து மாயமாகி இருப்பார்கள். குழப்பம் நேர்ந்திருக்காது. குழப்பம் நேராத போது அவளுடைய நண்பர்களோ காவலர்களோ அந்த இடத்தை அடைந்திருக்க முடியாது. சிறு சத்தம் கேட்டாலும் அந்த குரு தப்பித்து விடுவான்.

இரு பெண்களையும் அடுத்தடுத்து பார்த்தால் குழப்பம் வரும். குழப்பத்தை விட இருவருக்கும் நிச்சயம் ஆபத்து வரும். ஆனால், அந்த ஆபத்தை ஏற்கவில்லை என்றால், குற்றவாளிகள் எல்லோரும் தப்பித்து விடுவார்கள். இரண்டு பெண்களும் வேண்டுமென்றே அவர்களது வலையில் விழுந்து, தப்பித்து வந்தனர்.

விசில் அடித்த வரை தான் ஜீவிதாவிற்கு ஞாபகம் இருந்தது. அதன் பின் எதுவும் ஞாபகம் இல்லை. என்ன நடந்தது? என்று அவளது நண்பர்கள் வந்தால் தான் தெரியும்.

அவள் போட்டுக் கொடுத்தத் திட்டம் நிறைவேறியதா? என்பதை தெரிந்து கொள்ள ஆவலாகக் காத்திருந்தாள். கார்த்திக் அவளுக்கு உணவு வாங்கி வந்து கொடுக்க, சாப்பிட ஆரம்பித்தாள்.

“இன்னும் கழுத்து வலிக்குதா?” – கார்த்திக்.

“இல்ல. இவங்க எல்லாம் ப்ரஃபஷனல். உயிருக்கு சேதாரம் வர வைக்கவும் தெரியும். காப்பாத்தவும் தெரியும். எனக்கு பிரச்சனை இல்ல”

“இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க தான் பிடிக்கனுமா? போலீஸ் என்னத்துக்கு இருக்கு?”

“எட்டு பேரு செத்தப்பவும் போலீஸ் இருந்துச்சு கார்த்திக். சும்மா இருந்துச்சு. நான் இறங்கி தேடலனா, என் ஃப்ரண்ட்ஸ் உயிர பணயம் வைக்கலனா, இவ்வளவு உண்மை வெளிய வந்துருக்காது.

உங்க அண்ணன் தேடுனார் தான். ஆனா, அவரோட எல்லை ரொம்ப சின்னது. நாங்க யோசிச்சதுல பாதி கூட அவரால யோசிக்க முடியல. சோ, நாங்க ஆரம்பிச்சத எந்த எல்லைக்கு வேணா போய் முடிப்போம்”

“நீயும் சிஐடில சேர்ந்து இருக்கலாம்”

“எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்ல. அதுல சேர்ந்தா மைமூன் அக்காவும் பயப்படுவாங்க. இதுக்கே எவ்வளவு பயந்தாங்கனு பார்த்தல? எனக்கு பிடிச்ச படிப்பே போதும்”

“கடைசியா ப்ளான் என்ன ஆச்சு?”

“நிது வந்தா தான் தெரியும்”

“என்ன ப்ளான்? கொஞ்சம் விளக்கமா சொல்லேன்.”

“என்னை கடத்துவாங்கனு தெரியும். கண்டிப்பா உங்க ஊருல வச்சு என்னை கொல்ல மாட்டாங்கனு தான் தோனுச்சு. எனக்கு பதிலா தாரண்யாவ தூக்க வச்சோம். அவள பார்த்து அவங்க டென்சன் ஆகி இருப்பாங்க.

அப்போ நான் போய் நின்னா, நான் கிடச்ச சந்தோசத்துல தப்பு பண்ண வாய்ப்பிருக்கு. அப்படி நினைச்சு தான் போனோம். ஆரம்பத்துல எல்லாமே சரியா தான் நடந்துச்சு. திடீர்னு தாரண்யாவ எனக்கு எதிரா திருப்பி விட்டுட்டாங்க. அவள சமாளிச்சு, விசில் அடிச்சு எல்லாரையும் உள்ள கூப்பிட்டது வரை தான் ஞாபகம் இருக்கு.

ஆனா, போட்டுக் கொடுத்த ப்ளான் கடைசி வரை யூஸாகும். எனக்கோ தாரண்யாக்கோ என்ன நடந்தாலும், அந்த குருவ விட்டுற கூடாது. இடியே விழுந்தாலும், அவன மிஸ் பண்ண கூடாதுனு நிதுக்கு சொல்லி இருந்தேன்.

அவன் அத ஃபாளோவ் பண்ணா, அந்த குரு எங்க போனாலும் தப்பிக்க முடியாது.”

“சப்போஸ் தாரண்யாவ உனக்கு எதிரா திருப்பி விட்ட மாதிரி நிதுலன மாத்திட்டா?”

“அவன் அவ்வளவு ஈசியானவன் கிடையாது. சட்டுனு நிலமைய புரிஞ்சுகிட்டு தன்ன காப்பாத்திக்குற ஆளு. முடிஞ்ச வரை எதிர்ல இருக்கவங்கள சேதாரம் பண்ணாம விட மாட்டான்.”

“எல்லாரும் சக்ஸஸ் ஆனா சரி”

மாலை மயங்கி, சூரியன் அஸ்தமிக்கும் நேரம். அந்த மருத்துவமனையின் வாசலில் நின்று இருந்தாள் ஜீவிதா.

இதே போன்ற ஒரு பொழுதில் தான், ஒரு வாரத்திற்கு முன்பு பேருந்தில் வந்து கொண்டிருந்தாள். மனதில் பல காயங்கள் வலிகளை சுமந்து கொண்டு, பிடிக்காமலே அந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

இன்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டு, கடைசி முயற்சியில் வெற்றி பெற்றோமா? என்ற எதிர் பார்ப்புடன் நின்று இருந்தாள்.

சூரியன் மறைந்து வானம் இருண்டு போக, சுற்றிலும் விளக்குகள் எரிய ஆரம்பித்தது. ஜீவிதா வாசலிலேயே நின்று இருந்தாள். நொடிக்கொரு முறை கைபேசியை பார்ப்பதும், வாசலை பார்ப்பதுமென நின்று இருக்க, அவளது நண்பர்களுடைய கார் கண்ணுக்குத் தெரிந்தது.

வேகமாக அதை நோக்கி ஓடினாள். உள்ளே இருந்து எல்லோருமே இறங்க, அப்போது தான் அவளுக்கு நிம்மதி வந்தது. விபினுக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டு இருந்தது.

நிதுலனும் மற்றவர்களும் அவளை பார்த்து விட்டு, “எப்போ எந்திரிச்ச?” என்று கேட்டனர்.

“தாரண்யா எங்க?” என்று விபின் கேட்க, “உள்ள இருக்கா. இன்னும் முழிக்கல. என்னாச்சு?” என்று கேட்டாள்.

“ஹா.. நாங்க இறங்கி ஒரு கேஸ் தோத்ததா சரித்திரமே இல்ல” என்று நிதுலன் கூற, “சூப்பர்” என்று ஜீவிதா குதூகலமாக கூறினாள்.

“உள்ள வா. தாரண்யாவ பார்த்துட்டுப் பேசலாம்” என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றனர்.

தாரண்யா இருந்த அறையில் எட்டிப் பார்த்து விட்டு, காயம் பட்டிருந்தவர்கள் எல்லோரும் மருத்துவம் பார்த்துக் கொண்டனர்.

“நிது முதல்ல நடந்தத சொல்லு. ஆர்வம் தாங்கல” என்று ஜீவிதா நச்சரிக்க, அவளோடு ஒரு இடத்தில் அமர்ந்தான். கார்த்திக் அங்கு நிற்க, அவனையும் அழைத்துக் கொண்டாள்.

“நீ சொன்னத தான் பண்ணேன். எல்லாரும் உன் கையில இருக்க துப்பாக்கிய பிடுங்க பார்த்துட்டு இருந்தாங்க. நான் அந்த குருவ பார்த்துட்டு இருந்தேன்”

“என் கையில இருந்த கன்னா?”

“ஆமா.. நீ பாட்டுக்க போலீஸ டார்கெட் பண்ணுற. கொஞ்ச நேரத்துல உன் நெத்திலயே கூட வச்சுட்ட”

“அய்யய்யோ..! என்னடா பண்ணீங்க?”

“நாங்க என்ன பண்ண? நான் குருவயே தான் கவனிச்சேன். விபின் என்னை குருவ ஃபாலோவ் பண்ண சொல்லிட்டு, அவனும் மத்தவங்களும் தான் உங்கள கவனிச்சாங்க.”

“அந்த குரு பிசாசு தான் என்னை அப்படி மாத்தி இருக்கும்”

“ம்ம்.. எல்லாரும் உன்னை பார்க்கும் போது, நான் மட்டும் அவன கவனிச்சுட்டு இருந்தனா… திடீர்னு தரைக்குள்ள இறங்கிட்டான். பக்கத்துல வேகமா போய் பார்த்தா… உட்கார்ந்த இடத்துல இருந்து கீழ பள்ளம் ஒன்னு வச்சுருக்கான். இன்னொன்னு தெரியுமா? அந்த ஆளால நடக்க முடியாது”

“அடப்பாவி..! அப்புறம்?”

“அவன் போன பள்ளத்துக்குள்ள குதிச்சா, வழுக்கிட்டு போகுது. அவன் நல்லா வீல் மூலமா போய்ட்டு வருவான் போல.. வேகமா போயிட்டு இருந்தான். சறுக்கிட்டே போய் ஒரு இடத்துல முட்டிகிட்டேன். நான் கூட அடி படாம தப்புச்சுட்டேன். உங்கள பிடிச்சுட்டு என் பின்னாடி வந்த விபின் நேரா போய் சுவருல முட்டிக்கிட்டான்.

அங்க எங்க கதவு இருக்குனு தேடி கண்டுபிடிச்சோம். அப்புறம் எங்களோட போலீஸும் வந்து, காடு முழுசா தேடி அவன கண்டுபிடிக்கவே லேட் ஆகிடுச்சு. நடக்க முடியாதவன் ரொம்ப தூரம் போக முடியாதுனு பார்த்தா, காட்ட விட்டே வெளிய போயிட்டான்.

வெளிய இருந்த கேரளா போலீஸ்க்கு விசயத்த சொல்லி, செக் போஸ்ட்ல பிடிக்க வச்சோம். போலீஸ் அவங்களே கேஸ பார்த்துக்குறதா சொன்னாங்க. எதுக்கு? அரசியல்காரனுங்க உள்ள வர்ரதுக்கா? நாங்களே பார்த்துக்குறோம்னு சொல்லிட்டு, அவன அங்க இருந்து கஷ்டடில அனுப்பிட்டு வரோம்”

“நாளைக்கு அவனயும் அந்த ஜோசியகாரனையும் விசாரிக்கனும்” என்று விபின் வந்து கூற, “உங்கள எல்லாம் அவன் வசியம் பண்ணலயா?” என்று கார்த்திக் கேட்டான்.

“அவன் பவர் பார்வையில தான்னு தெரிஞ்சுட்டு சும்மா இருப்போமா? அவன பிடிக்கனும்னா கண்ண குருடாக்கனும்னு முடிவு பண்ணியாச்சு”

“குரு குருடன் ஆனா.. கேள்வி கேட்க மாட்டாங்களா உங்கள?”

“கேட்டா எப்படி பேசனும்னு இவங்களுக்குத் தெரியும்” – ஜீவிதா.

“ஓ.. எப்படியோ உயிர பணயம் ஜெயிச்சுட்டீங்க. அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்”

“நன்றி.” – விபின்.

“இப்போவே முடிவு பண்ணா எப்படி? உங்க அண்ணன் மாதிரி பல ஆளுங்க வந்து கம்ப்ளைண்ட் கொடுக்கனும். அப்புறம் தான் அஃபீஸியலா எல்லாம் ஸ்டார்ட் ஆகும். அதுக்கப்புறம் விசாரிச்சு, கண்டு பிடிச்சு, தண்டனை வாங்கி….” என்று ஜீவிதா இழுக்க, “பண்ணிடலாம் விடு. என்ன ஊரு ஊரா சுத்தி, கம்ப்ளைண்ட் பண்ட எல்லாரையும் கூப்பிடனும். நீ வய்ரியா?” என்று நிதுலன் கேட்டான்.

“என்னால எல்லாம் முடியாது. நானே ஒரு வாரத்துல ஊருக்கு போகனும். அதுக்குள்ள பிரச்சனை முடியுமானு யோசிச்சுட்டு இருந்தேன். நல்ல வேலை சீக்கிரமே முடிஞ்சுடுச்சு. சரி விட்டா விடிய விடிய இப்படியே பேசிட்டு இருப்போம். எல்லாரும் ரூம்க்கு போங்க. நான் தாரண்யா கூட இருக்கேன்”

எல்லாரையும் அனுப்பியவள் கார்த்திக்கையும் கிளம்ப சொல்ல, “உங்கப்பாக்கு இப்போ பரவா இல்லையாம்” என்றான் கார்த்திக்.

“ஓ..”

“ஆப்ரேஷன் வரை இருப்பியா?”

“நோ.. எனக்கு வேற வேலை இருக்கு. அவர அவரோட குடும்பம் பார்த்துக்கும்.”

“நீ பண்ணுறது தப்புனு சொல்ல மாட்டேன். ஆனா, அவங்க கிட்ட சொல்லிட்டு நீ கிளம்பி போலாம்ல?”

“நோ. நான் திரும்ப அந்த ஊருக்கும் வர மாட்டேன். அவங்கள பார்க்கவும் மாட்டேன்.”

“ஊருக்குக் கூட வர மாட்டியா?”

“ஆமா”

“என்னை பார்க்க கூடவா?”

“நோ. நீயும் நானும் வேணும்னா வெளிய மீட் பண்ணிக்கலாம். உன் கல்யாணத்த வேற ஊருல வச்சா கூப்பிடு. வர்ரேன்”

“நானும் அவளும் ஒரே ஊரு. கல்யாணம் மட்டும் வேற ஊரா?”

“அப்போ சாரி. என்னால வர முடியாது.‌ கல்யாணத்துக்கு அப்புறம் ஹனி‌மூன்க்கு வேணா பெங்களூர் வா. பார்க்கலாம்”

“யாருக்காகவும் உன் கொள்கைய விட்டுக் கொடுக்க மாட்ட?”

“கண்டிப்பா”

“அந்த அக்கா அடிச்சே கேட்கல. நான் சொல்லியா கேட்கப் போற?”

“அக்கா அடி எல்லாம் எனக்கு சாதாரணம். எந்த தப்பு பண்ணாலும் சரி, எனக்கும் அவங்க பையனுக்கும் அடி கண்டிப்பா விழும். பாரபட்சமே கிடையாது. நான் அடுத்த வீட்டு பிள்ளனு எல்லாம் நினைக்கவே மாட்டாங்க. அதான்‌ அவங்கள அவ்வளவு பிடிச்சது”

“அப்போ உங்க அத்த?”

“அத்த அதட்டுவாங்க. மிரட்டுவாங்க. அடிக்க மாட்டாங்க.”

“அவங்கள பார்க்கலையா?”

“அவங்கள பார்க்க தான் போறேன். தீஷாக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க. போய் அத பார்த்து முடிச்சுட்டு தான் ஊருக்கு போகனும்”

“இங்க கூட பிறந்த தம்பியும் தங்கச்சியும் இருக்காங்க. ஆனா, உனக்கு தீஷானு வேற தங்கச்சி ஜாஃபர்னு வேற தம்பியா?”

“தீஷா எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா? பத்து வயசு வரை அவ கூட வளர்ந்து இருக்கேன். நிறைய அடிச்சுக்குவோம். உண்மையா ஒரு தங்கச்சி பாசம் என்னனு அவ தான் எனக்கு உணர்த்துனா”

“ம்ம்”

“தம்பி.. அவன் அப்போ அப்போ அக்கானு கூப்பிடுவான் சித்தினு கூப்பிடுவான். பல நேரம் பேர சொல்லி தான் கூப்பிடுவான். இங்க வரும் போது சொல்லி தான் அனுப்புனான். நீ நிச்சயமா அங்க இருக்க மாட்ட. இங்க தான் வருவ. அது வரை நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். போயிட்டு வானு. ஒரு அப்பா, அண்ணா, தம்பினு எல்லாத்தையும் அவன் கிட்ட பார்க்கலாம்.”

“உனக்கு ரத்த சொந்தத்தால கிடைக்காதது எல்லாம் வேற வகையில கிடச்சுருக்கு இல்ல?”

“ஆமா.. இவங்கள விட அவங்க பல மடங்கு நல்லவங்க. இவங்க ராசி இல்லனு தூக்கி எறிஞ்சவள, வளர்க்கனும்னு அலர் அத்தைக்கு தலையெழுத்தா என்ன?

ரோட்டுல கிடந்த பொண்ண தூக்கிட்டுப் போய், பணத்த செலவு பண்ணி காப்பாத்தனும்னு மைமூன் அக்காக்கு விதியா என்ன?

ஆனா, ரெண்டு பேரும் செஞ்சாங்க. என் உயிர் இருக்க வர ரெண்டு பேருக்கும் ஒவ்வொரு விதத்துல கடன் பட்ருக்கேன். அத்த சுயமரியாதை ரோசம்னு வேணாம்னு சொல்லியும், அவங்கள என்னால விட முடியல. அக்காவ இந்த ஜென்மத்துல பிரிய மாட்டேன்”

“நீ சந்தோசமா இருக்கனா அதுவே போதும். மத்தபடி எத பத்தியும் எனக்கு பிரச்சனை இல்ல”

“திரும்ப ஊருக்கு வர மாட்டேன்னு தான் அன்னைக்கே உன் ஆள பார்த்தேன். உங்க அம்மா கிட்ட மட்டும் மன்னிப்பு கேட்டுரு. என்னால அவங்களுக்கு கஷ்டம்”

“நான் சொல்லிட்டேன். அம்மா புரிஞ்சுகிட்டாங்க”

“அப்போ சரி. சான்ஸ் கிடச்சா திரும்ப மீட் பண்ணலாம்”

“உன் அட்ரஸ் கொடுத்துட்டுப் போ”

அவளது முகவரியை கொடுத்து விட்டு, கார்த்திக்கை அனுப்பி வைத்தாள்.

தொடரும்.

Leave a Reply