சாரா 6
![]()
தன் சொந்த கதையை புலம்பிக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி. அவளக்கு ஏகாம்பரமும் முடிந்த வரை உதவிக் கொண்டிருக்க சாணக்கியன் பேச்சு சத்தம் கேட்டு வந்து சேர்ந்தான்.
“லவ்வர் இருக்கானா?” என்று ஏகாம்பரம் கேட்டு வைக்க “இருக்காரே” என்று ஆர்வமாக சொல்லி விட்டாள் ராகவி.
“அப்ப அவன பணத்த எடுத்து வந்து கொடுக்க சொல்லு” என்ற குரல் சாணக்கியனிடமிருந்து வந்தது.
ராகவியும் ஏகாம்பரமும் ஒன்றாக திரும்பி பார்த்தனர். சாணக்கியன் ராகவியை தான் பார்த்தான். முகம் பாதி மறைந்து போயிருக்க கண்கள் மட்டுமே தெரிந்தது.
“யார சொல்லுறீங்க?” என்று புரியாமல் ராகவி கேட்க “உன் லவ்வர் பணத்த எடுத்துட்டு வர மாட்டானா?” என்று ஏகாம்பரமே கேட்டான்.
“தெரியாதே”
“ஏன்? அவன் கிட்ட பணமில்லையா? இல்ல உனக்கு தர மாட்டானா?” என்று சாணக்கியன் கேட்க “கேட்டா கொடுப்பாரானு எனக்கு தெரியாது. இது வரை கேட்டது இல்ல” என்றாள்.
“இப்ப கேளு” – ஏகாம்பரம்.
“எந்த உரிமையில?”
“லவ்வர்னு சொன்ன?”
“எனக்குத்தான் அவரு லவ்வரு. அவருக்கு நான் இல்ல. இது ஒன் சைட் லவ்வு”
ராகவி பாவமாக சொல்ல சாணக்கியன் முகத்தில் தான் உணர்ச்சிகள் தொலைந்து போனது.
“அப்ப இன்னும் உன் லவ்வ சொல்லலயா?”
“இனியும் சொல்ல போறது இல்ல”
“ஏன்?”
“இன்னும் ரெண்டு வாரத்துல அவருக்கு கல்யாணம்னு கேள்வி பட்டேன்” என்றவள் குரல் உள்ளே போய் விட்டது.
ஏகாம்பரம் ‘இவள எந்த கணக்குல சேர்க்குறது?’ என்று யோசித்துக் கொண்டிருக்க சாணக்கியன் இரண்டெட்டில் அவளை நெருங்கினான்.
விரலசைவில் ஏகாம்பரத்தை அவன் வெளியேற்ற ராகவி புரியாமல் பார்த்தாள்.
“சோ உனக்காக யாருமே இப்ப இல்ல?”
“இல்ல சார்”
“உனக்கு இங்க என்ன நடந்தாலும் கேட்க யாரும் வர மாட்டாங்க?”
இதைக்கேட்டு ராகவி அதிர அவள் முகத்திலிருந்த துணையை ஒரே கையால் உறுவி எடுத்து விட்டான் சாணக்கியன்.
அவன் செய்கையின் அர்த்தம் புரியவில்லை என்றாலும் இயற்கையான எதிர்ப்பு அவளிடம் எழ துப்பட்டாவை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
கூடவே அவளது பார்வையும் மாறிப்போனது. அது வரை பயந்தோ சோகமாகவோ இல்லை வெறுமையாகவோ பார்த்திருந்த பார்வை இப்போது அனலை கக்கியது.
“கேட்க ஆளில்லனா? என்ன வேணா செய்வீங்களா? ஷால விடுங்க” என்று பிடித்து இழுத்தாள்.
குரலில் உஷ்ணம் கூட அவளிடம் இல்லாத பலத்தை கொண்டு அவனிடமிருந்து பறிக்க பார்த்தாள்.
“நீ தான கடன அடைக்க எந்த வேலை வேணும்னாலும் செய்வேன்ன?”
“சார்” என்று குரலை உயர்த்தி கோபமாக பார்த்தாள்.
“பிச்சை எடுத்துக் கூட உங்க கடன அடைச்சுடுவேன் சார். ஆனா இந்த மாதிரி பேசாதீங்க” என்று பட்டென கூறி விட்டாள்.
“எந்த மாதிரி?”
“முதல்ல ஷால விடுங்க”
“இதுவும் என் பணத்துல வாங்குனது தான்”
“அதுக்காக இஷ்டத்துக்கு இழுப்பீங்களா? விடுங்க” என்று அவள் அதட்ட சாணக்கியன் விட்டு விட்டான்.
உடனே அதை சரியாய் போட்டுக் கொண்டு அவனை முறைத்தாள்.
“உங்க பணத்த வேலை செஞ்சு அடைக்கிறேன். அதுக்காக வேற எதாவது செய்வேன்னு எல்லாம் எதிர்பார்க்காதீங்க” என்று கோபமாக பேசிக் கொண்டிருந்தவளுக்கு கண் இருட்டிக் கொண்டு வந்தது.
தலையை உலுக்கிக் கொண்டு திரும்ப தலைசுற்றி கீழே விழுந்திருந்தாள்.
முழுதாய் மயக்கமில்லாத நிலையில் அடி பட்டு வலியும் ஏற்பட தானாய் எழுந்தமர முயற்சித்தாள்.
முடியாமல் போக சட்டென அவளை தூக்கிய சாணக்கியனை தடுக்க முடியவில்லை.
“ஏகாம்பரம்..” என்று சாணக்கியன் குரல் கொடுக்க அவன் ஓடி வந்தான்.
“தண்ணிய எடு” என்று கூறி விட்டு ஒரு இடத்தில் அமர வைத்தான்.
தண்ணீரை முகத்தில் தெளித்து குடிக்கவும் வைத்து அவளது மயக்கத்தை போக்கினர்.
காலையில் சாப்பிடவும் இல்லை. முதலில் இங்கிருந்து கிளம்புவோம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அதற்கு வழி இல்லாமல் போனது. இப்போது வேலை பார்த்து உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தது.
“சாப்பிட்டியா காலையில?” என்று ஏகாம்பரம் கேட்க அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.
“எந்திரி. நீ உள்ள இருக்க ஒரு ரூம்ல தங்கு” என்று சாணக்கியன் அழைக்க நிமிர்ந்து பார்த்தவள் “அதுக்கும் அஞ்சு லட்சம் கொடு பத்து லட்சம் கொடுனு கேட்குறதுக்கா? வேணாம் சார். இருக்கதே போதும்” என்றாள்.
“சார் கூப்பிட்டா போகனும். இதென்ன எதிர்த்து பேசுற நீ?” என்று ஏகாம்பரம் கேட்க “உங்களுக்கு தெரியாது. அவரு இதுக்கும் சேர்த்து எதாவது செய்வாரு. இருக்க கடனயே எப்படி அடைக்கனு தெரியாம இருக்கேன். வாழ்க்கையில யாரு கிட்டயும் கடன் பட கூடாதுனு கொள்கையோட வாழ்ந்தேன். ஆனா… ப்ச்ச்” என்றவள் தண்ணீரை குடித்து வயிறை குளிர்வித்தாள்.
“இப்படி பேசுனா பணம் வாங்காம உன்னை அனுப்பிடுவேன்னு நினைப்பா? ஒழுங்கா எந்திரி” என்று சாணக்கியன் குரலை உயர்த்த அது வேலை செய்தது.
உடனே எழுந்து நின்றாள்.
“போ..” என்று வாசலை காட்ட தலையை தொங்க போட்டுக் கொண்டு நடந்தாள்.
அவளை வீட்டுக்குள் மீண்டும் அழைத்து வந்தவன் “அந்த ரூம்ல போய் இரு” என்று அனுப்பி வைத்தான்.
“இதுக்கு எவ்வளவு வாடகை?”
“உன் அஞ்சு லட்சத்த கொடுத்துட்டா போதும். இதுக்கெல்லாம் வாடகை இல்ல”
“எதே அஞ்சு லட்சமா? சார் நீங்க கேள்விக்கு பதில் சொன்னா பாதி குறைக்குறதா சொன்னீங்க?”
“பரவாயில்ல. மயக்கம் தெளிஞ்சுடுச்சு” என்றவன் அங்கிருந்து சென்று விட நிற்கவும் தெம்பில்லாததால் ராகவி அவனை அழைக்காமல் அறைக்குள் சென்று விழுந்தாள்.
சில நிமிடங்களில் கதவை தட்டி விட்டு உள்ளே வந்த ஏகாம்பரத்தின் கையில் உணவும் அவளுக்கான மருந்தும் இருந்தது.
“இத சாப்பிட்டு ரெஸ்ட் எடு. சாயந்தரமா உன் வேலைய சொல்லுறேன்”
“அப்படி என்ன வேலை?”
“நான் செய்யுற எல்லா வேலையிலயும் நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும்”
“ஓஹோ.. ஆமா நீங்க என்ன வேலை செய்யுறீங்க?”
“இந்த வீட்டுல இருக்க எல்லா வேலையும் நான் தான் பார்க்குறேன்”
“எல்லாம்னா?”
“எல்லாம் தான்”
சாப்பிட்டுக் கொண்டே கேள்வி கொண்டிருந்தவள் திடீரென விக்கல் எடுக்க தண்ணீரை குடித்தாள்.
“சாப்பிடும் போதாவது பேசாம இரு” என்று ஏகாம்பரம் அதட்டி விட்டு சென்று விட்டான்.
சாப்பிட்டு முடித்து மருந்தையும் போட்டுக் கொண்டவள் உடனே தூங்கி விட்டாள்.
மாலை சற்று தெளிவோடு அவள் வெளியே வர ஏகாம்பரம் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.
“கொண்டாங்க.. நான் பண்ணுறேன்”
“நானே பண்ணிக்கிறேன்”
“அப்புறம் நான் என்னைக்கு கடன அடைக்கிறது?” என்று கேட்டவள் அவன் கையிலிருந்ததை பிடுங்கி வேலையை ஆரம்பித்தாள்.
துடைத்துக் கொண்டிருக்கும் போதே கதவோரம் யாரோ நிற்பது போல் தெரிய திரும்பி பார்த்தாள்.
அழகான பெண். புடவையில் தேவதை போன்ற புன்னகையுடன் நின்றிருந்தவள் ராகவியை பார்த்து தலையை மட்டும் அசைத்தாள்.
“நீங்க? ஏகாம்பரம்.. இங்க வாங்க” என்று ராகவி குரல் கொடுக்க அவன் உடனே வந்தான்.
வந்தவன் வாசலில் நின்றிருந்தவளை பார்த்து விட்டு “உள்ள வாங்க மேடம்” என்று வரவேற்றான்.
“துடைச்சுட்டு இருக்காங்க. வந்தா அழுக்காகிடுமே” என்றாள் அவள்.
குரலே இனிமையாக வந்தது அவளிடமிருந்தது.
“பரவாயில்ல வாங்க. பார்த்துக்கலாம்” என்று ஏகாம்பரம் சொன்னதும் உள்ளே வந்தாள்.
“இந்த பொண்ணு யாரு ஏகாம்பரம்? சாரா வீட்டுல பொண்ணுங்கள பார்க்குறது ஆச்சரியமா இருக்கே”
“இங்க வேலைக்கு சேர்ந்துருக்கு. நீங்க உட்காருங்க. காபி போட்டுட்டு வரட்டுமா?”
“ஓகே”
ஏகாம்பரம் நகர்ந்ததும் ராகவி அவளது வேலையை தொடர “எப்ப இங்க வந்த?” என்று விசாரித்தாள்.
“மூணு நாளாகுது மேடம்”
“இங்க யூஸுவலா பொண்ணுங்கள வேலைக்கு வைக்க மாட்டாங்களே. நீ எப்படி சேர்ந்த?”
“அத நீங்க சாரா சார் கிட்ட தான் கேட்கனும்”
“உன் பேரென்ன?”
“ராகவி. உங்க பேரு?”
“அனுசயா”
தலையை ஆட்டி விட்டு வேலையை முடித்துக் கொண்டு நகர்ந்தாள்.
ஏகாம்பரம் காபியோடு வர சாணக்கியனும் வந்து விட்டான்.
“எடுத்துட்டு வந்தியா?” என்று கேட்டபடி வந்தவனிடம் ஃபைலை நீட்டியவள் “புதுசா பொண்ணுங்க எல்லாம் வேலைக்கு வச்சுருக்க போல?” என்று விசாரித்தாள்.
“நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்” என்றவன் ஃபைலை புரட்டி படிக்க ஆரம்பித்தான்.
“உன் அப்பாவுக்கு தெரியுமா?”
“நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்”
மீண்டும் அழுத்தமாக சொன்னான்.
“நான் அவர் கிட்ட இத சொல்லுவேன் சாரா.”
“ஃபைல் ஓகே. நீ போகலாம்”
அதோடு முடிந்தது என்று அவன் நகர “சாரா” என்று நிறுத்தினாள்.
“இந்த பொண்ணு யாருனு எனக்கு தெரிஞ்சாகனும். நீ சொல்லலனாலும் கண்டு பிடிப்பேன்”
“என்னனு?”
நக்கலாக கேட்க “அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்னு” என்றாள் அவள்.
“என்ன சம்பந்தம்?”
“நீ ஒரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்து மூணு நாளா வச்சுருக்க. அவ வெறும் வேலைக்காரினு நினைக்க நான் என்ன பைத்தியமா?”
“நான் வேலைக்காரினு சொல்லவே இல்லையே?”
“அப்ப வீட்டுக்காரியா?”
“ஆனா என்ன தப்புங்குறேன்?”
“சாரா!”
அதுவரை அமைதியாகவே பேசிக் கொண்டிருந்தவள் சட்டென அதிர்ந்தாள்.
“அவளுக்கு சரினா அவள கல்யாணம் பண்ணிக்க கூட செய்வேன். அதுல தலையிடவும் கேள்வி கேட்கவும் உனக்கு உரிமை இல்ல. கெட் அவுட்” என்றவன் அங்கு அதிர்ச்சியின் உட்சத்தில் உறைந்து போயிருந்த ராகவியை கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.
அனுசயா ராகவியை ஒரு பார்வை பார்த்து விட்டு விறுவிறுவென கிளம்பி விட்டாள். வரும் போது இருந்த புன்னகை அவள் முகத்தில் காணாமல் போயிருந்தது.
மூன்று நாட்களாக சாராவின் வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்று கேள்வி பட்டுத் தான் பார்க்க கிளம்பி வந்திருந்தாள். அவள் வீட்டை துடைப்பதை பார்த்து நினைத்த அளவு பெரிய விசயம் இல்லையோ என்றே நினைத்திருந்தாள். ஆனால் சாரா படியிறங்கி வரும் போது அவனது கவனம் முழுவதும் ராகவியிடம் இருந்தது.
அவள் என்ன செய்கிறாள் என்பதை கவனித்தபடியே தன்னிடம் ஃபைலை வாங்குவதை புரியாத அளவு அவள் முட்டாள் அல்ல. அப்படி அவனை கவனிக்காமல் இருந்தால் அவள் இந்த வேலையில் இருக்கவே முடியாதே.
தன் முன்னால் நின்றாலும் தன்னிடம் பேசினாலும் ஒருவரின் உடல் மொழியை கொண்டே அவர்களது கவனம் எங்கே செல்கிறது என்பதை சுலபமாக கண்டு கொள்ள முடியும். அதை அனுசயாவும் உணர்ந்திருந்தாள்.
ராகவியை வைத்துக் கொண்டே அவளை பற்றி பேச்சை எடுத்ததும் அதற்காக தான். அவள் யார்? அவள் ஏன் சாராவின் கவனத்தை இழுக்கிறாள்? என்று தெரிந்து கொள்ள நினைத்து விசயம் கை மீறி விட்டதோ என்று தோன்றியது.
காரில் ஏறி அமர்ந்ததும் கைபேசியை எடுத்தவள் “நான் வைரவர் சார மீட் பண்ணனும். ஏற்பாடு பண்ணு” என்று கூறி விட்டு வைத்தாள்.
தொடரும்
